கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓகி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. கடலின் சீற்றமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி பேரலைகள் தாக்கப்போவதாக தகவல் வெளியானது. சமூக வலைதளங்களில் தீயாக பரவிய இந்த தகவலால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜான்சிங் சவான் சுனாமி குறித்து பரவும் வதந்திகளை மறுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எந்த வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சுனாமி குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
முழு வீச்சில் மீட்புப்பணி:
மேலும் ஓகி புயல் காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்த்துள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போக்குவரத்து பாதிப்பு தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடல் உள்வாங்கியிருப்பதாகவும், இதனால் அம்மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் வதந்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த அம்மாவட்ட ஆட்சியர் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.