இணை தயாரிப்பாளர் அசோக்குமார் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் நடிகர் சசிகுமார் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கம்பெனி புரொடெக்ஷன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். அவர் மதுரையில் உள்ள அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருந்தார். அதற்கு அவர் அசோக்குமார் குடும்பத்தினரை அவமானப்படுத்தியதாகவும் அவரை கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது ஒரு தற்கொலை கடிதத்தையும் எழுதியுள்ளார். அதில் சசிகுமார் அவமானப்படுவதை விரும்பவில்லை என்றெல்லாம் அசோக்குமார் கூறியிருந்தார். மேலும் தனது தற்கொலைக்கு முழு காரணம் அன்புச்செழியன்தான் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். எனினும் அவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். இந்நிலையில் வளசரவாக்கத்தில் இன்று இயக்குநர் சசிகுமார் விசாரணைக்கு ஆஜரானார்.
அன்புசெழியன் மீது இன்னும் பல்வேறு புகார்கள் வரும்:
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் சசிகுமார் நேரில் ஆஜராகி சுமார் இரண்டு மணி நேரம் விளக்கமளித்த பின் சசிகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,
“எனக்கும் அசோக்குமாருக்குமிடையான பழக்கவழக்கங்கள் குறித்து துணை ஆணையரிடம் விளக்கமளித்தேன். அன்புசெழியனுக்கு ஆதரவாக திரைத்துறையிர் ஒருசிலர் கூறுவது அவர்களது தனிப்பட்ட கருத்து ,நான் துணை ஆணையரிடம் சுமார் இரண்டு மணி நேரம் விளக்கமளித்தேன்”என்றார்.