நான்கு மாணவிகள் தற்கொலை: இதுவே கடைசியாக இருக்க வேண்டும்! ராமதாஸ்

1453101251-2005

மாணவர்கள் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தையடுத்த பனப்பாக்கம் பகுதியில் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவிகள் சரியாக படிக்காததால், அவர்களின் பெற்றோரை அழைத்து வரும்படி ஆசிரியர் கூறியதாகவும், இந்தத் தகவலை பெற்றோரிடம் கூறுவதற்கு அஞ்சி அம்மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. நமது கல்வி முறை தான் இதற்குக் காரணம். கற்றலும், கற்பித்தலும் மட்டுமே கல்வி அல்ல.

Ramadoss

வாழக்கையின் சவால்களை எதிர்கொள்வதும் தான் கல்வி ஆகும். ஆனால், நமது கல்வி முறை ஏட்டுக்கல்வியை மட்டுமே வழங்கி வருகிறது. கல்வி என்பது கசப்பானதாக இருக்கக்கூடாது… அனுபவித்து ரசிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் புதிய பாடத்திட்டமாவது இதை நிறைவேற்ற வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவது போன்று, சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய, கட்டணமில்லாத, கட்டாயக் கல்வியை வழங்குவதன் மூலம் தான் கல்வியை விருப்பத்திற்குரியதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்ற முடியும். அப்போது தான் மாணவர்கள் தற்கொலை என்ற அவலத்துக்கு முடிவு கட்ட இயலும். இதை உணர்ந்து இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்; இனி மாணவர்கள் தற்கொலை நடக்காமல் அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response