முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக, கடந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 11 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ அல்லது சி.பி.ஐ.க்கோ மாற்ற உத்தரவிடக்கோரி, ஆனந்த் ராய் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ரவீந்திர பட், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விசாரணையின் தற்போதைய நிலவரம் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இவ்வழக்கை டெல்லி போலீசாரே திறம்பட விசாரிப்பார்கள் என்றும், எனவே, சி.பி.ஐ. விசாரணைக்கோ, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கோ உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 13-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.