ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். பின்னர் சசிகலா தரப்பு டிடிவி தலைமையின் கீழ் வந்தது.
ஆர்.கே.நகர் தேர்தலின் போது ஒபிஎஸ் தரப்பும் டிடிவி தரப்பும் இரட்டை இலைக்கு போட்டி போட்டனர். இதனால் இரட்டை இலை முடக்கப்பட்டது. இதையடுத்து டிடிவி தரப்பில் இருந்த முதலமைச்சர் எடப்பாடியும் அமைச்சர்களும் ஒபிஎஸ்சுடன் கைகோர்த்து டிடிவியை கழட்டி விட்டனர்.
ஆனால் டிடிவி நாங்களே உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலையை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் கூறி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். ஒபிஎஸ் தரப்பும் தாக்கல் செய்தனர்.
இதைதொடர்ந்து 7 தரப்பு விசாரணை நிறைவுற்று தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலை தொடர்கிறது. இந்த தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இரட்டை இலை அதிக ஆதரவாளர்களும் நிர்வாகிகளும் கொண்ட எடப்பாடி அணிக்கே தரப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரணம், உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டபோது அதிக சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவை பெற்ற அகிலேஷ் யாதவுக்கே அந்த கட்சியின் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதேபோல், ஐக்கிய ஜனதா தளத்தின் அம்பு சின்னம் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.