கோயம்பேட்டில் அங்காடி கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட 4 பேர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கோயம்பேட்டில் அங்காடி நிலம் கட்ட நில உரிமையாளர்களிடம் இருந்து தமிழக அரசு கையகப்படுத்தப்பட்டது. நிலம் பயன்படுத்தப்படாததால் உரிமையாளரிடம் நிலத்தை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நில உரிமையாளர்கள் 12 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வீட்டு வசதித் துறை செயலாளர் தர்மேந்திரா பிரதாப் யாதவ், தற்போதைய வீட்டு வசதித்துறை செயலாளர் கிருஷ்ணன், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் விஜய ராஜ்குமார் ஆகியோரை ஆஜராக உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட 4 பேர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது, கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.
நீதிமன்ற உத்தரவுகளை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.