சென்னையில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்துவருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறார். முதல்கட்டமாக வெள்ளிக்கிழமையன்று ஆர்.கே. நகர் தொகுதியில் நிவாரணம் மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிச்சாமி. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கினார். மருத்துவமுகாம்களை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று கொடுங்கையூரில் நிவாரணம், மீட்பு பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு நடத்தினார். முதல்வருடன் அமைச்சர்களும் உடன் சென்றனர்.
இதனிடையே சென்னையில் 5 நாட்களில் 56.6 செ.மீ. பருவமழை பெய்துள்ளது என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். 2 மாதங்களில் பெய்ய வேண்டிய 79 செ.மீ. மழையில் 5 நாளிலேயே 56 செ.மீ. மழை பெய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் பருவமழை தற்போது வரை 72% பெய்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். நிவாரணப்பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 177 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 18,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் 244 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் திட்டத்தை ஆஸ்திரேலியாவில் பார்க்க அதிகாரிகள் செல்ல இருக்கிறார்கள். அங்கு இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வுசெய்து இங்குச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
இந்த நிலையில் கொடுங்கையூரில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். தென்சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும், புறநகர் பகுதிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.