அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை தேறியுள்ள நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன், கல்லீரல் மிகவும் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி திடீரென்று அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நடராஜனுக்கு, கல்லீரல் செயல்திறன் குறைந்ததை தொடர்ந்து, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சுவாச கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் மற்றும் இதர தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உடல் நிலையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் ஏற்படாததால், அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து கடந்த அக்டோபர் 4ம் தேதி நடராஜனுக்கு விபத்தில் மூளைச்சாவு அடைந்த தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் கல்லுரீல் மற்றும் சிறுநீரகம் பொறுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
கடந்த வாரம் நடராஜன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் என்று ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தப் புகைப்படத்தை பார்த்தவர்கள் இது நடராஜன் தானா என்று சந்தேகித்தனர். ஏனெனில் அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் மிகவும் இளைத்து காணப்பட்டார் நடராஜன்.
இந்நிலையில் இன்று நடராஜனின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது வழக்கமான வெள்ளை ஜிப்பாவில் நடராஜன் தோற்றமளிக்கிறார். அவருக்கு அருகில் உதவிக்கு சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்களும் நிற்கின்றனர்.
இதனிடையே உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததையடுத்து நடராஜன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு சுவாசப் பிரச்னை சீரானதையடுத்து அவர் வீடு திரும்பியுள்ளார்.