வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மழைக்கால முன்னேற்பாடுகள் செய்திருப்பதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள் எனவும் ஆனால் அடிப்படை முன்னேற்பாடுகள் கூட இல்லை எனவும் திமுகவின் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் நேற்று அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக அரசு முதலமைச்சர் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனால் சென்னையில் எங்குமே மழைநீர் தேங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவதாகவும் அவர் அப்படித்தான் சொல்வார் குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் கூட எடுக்காத நடவடிக்கையை தமிழகத்தில் எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இதைதொடர்ந்து இன்று அறுந்த விழுந்த மின் கம்பியை மிதித்ததில் கொடுங்கையூரில் 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து திமுகவை சேர்ந்த கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மழைக்கால முன்னேற்பாடுகள் செய்திருப்பதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள் எனவும் ஆனால் அடிப்படை முன்னேற்பாடுகள் கூட இல்லாமல் சிறுமிகள் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.