கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குந்தாரப்பள்ளி, கோரல்நத்தம், ஜிங்களூர், சென்னசந்திரம், பிஸ்மில்லா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.
குந்தாரப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், சுகாதாரமற்ற நிலையில் இருந்த குடிநீர் குழாயைப் பராமரிக்காத வீட்டு உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், குடிநீர் இணைப்பைத் துண்டிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், அதே பகுதியில் ஆசிரியர் கிருஷ்ணன் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் பின்பகுதியில் தேங்கியுள்ள நீரில் டெங்கு கொசுப் புழுக்களான ஏ.டி.எஸ். புழுக்கள் இருப்பதைக் கண்டறிந்த அவர், ஆசிரியர் கிருஷ்ணனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
சென்னசந்தரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள குடிநீர்த் தொட்டிகளில் டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பதைக் கண்டறிந்த அவர், பணி நேரத்தில் பள்ளியில் இல்லாத தலைமையாசிரியர் ஆர்.கிருஷ்ணனை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வேப்பனஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் டெங்கு கொசுப் புழுக்கள் இருந்த நிலையில், சுகாதாரத்தைப் பராமரிக்காத வட்டார மருத்துவ அலுவலர் சரவணனுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தார்.
ஆய்வின் போது, பொதுமக்களைச் சந்தித்த அவர், குடியிருப்புகளின் சுற்றுப் பகுதிகளை சுகாதாரமாகவும், காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவும் வலியுறுத்தினார்.
அப்போது, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் பிரியாராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.