கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தவர் வி. செந்தில் பாலாஜி. தற்போது, தினகரன் ஆதரவாளராகவும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்கும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவைத் தலைவரால் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவர்.
ஏற்கெனவே செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது வாங்கல் குப்புச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு இடம் வாங்கப்பட்டது. பிறகு அந்த இடத்தில் கல்லூரி கட்ட போதிய வசதி இல்லை எனக்கூறி, தற்போது சணப்பிரட்டியில் கல்லூரி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சணப்பிரட்டியில் கல்லூரி கட்டுவதற்கு எதிராக அவருடைய ஆதரவாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் குப்புச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரிக்கு இடம் அளித்தவர்கள் ரியல் எஸ்டேட் நோக்கில் இடம் அளித்ததாகக் கூறி, அங்கு கல்லூரி கட்டக்கூடாது, சணப்பிரட்டியில் கட்டலாம் எனக் கூறியதையடுத்து, ஏற்கெனவே வாங்கல் குப்புச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க இடம் கொடுத்தவர்கள் உள்பட செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், உறவினர் வீடுகள், அலுவலகங்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் வியாழக்கிழமை கோவை, திருச்சி, மதுரை பகுதியில் இருந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். காலை முதல் இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், சனிக்கிழமை மூன்றாவது நாளாகவும் 36க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், உறவினர்கள் மற்றும் கரூர் மாவட்ட தினகரன் அணி அதிமுக துணை செயலாளராக இருந்து வரும் சரவணன் என்பவருடைய நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் தாரணி சரவணன் என்பவரின் நிதி நிறுவனத்துக்கு சீல் வைத்து வருமான வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நிதி நிறுவன உரிமையளார் சரவணனை கரூர் மாவட்ட துணை செயலாளராக அண்மையில் டிடிவி தினகரன் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, ரூ.3 கோடி நகைகளும், ரூ.1,20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 20 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் சோதனையில் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.