மெக்ஸிகோ அருகே தென் பசிபிக் பெருங்கடலில் 8 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய நிலநடுக்கமான இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக தெரியவில்லை. ஆனால் மெக்ஸிகோ தலைநகரான மெக்ஸிகோ சிட்டி கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் மையப் பகுதி கடலில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்ஸிகோவின் பல பகுதிகளில் மக்கள் அதிர்வை உணர்ந்தனர். மெக்ஸிகோ சிட்டியில் கட்டடங்கள் ஆடின. மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். அங்கு பதட்டம் நிலவுகிறது.
மெக்ஸிகோ, கவுதமாலா, எல் சால்வடார், கோஸ்டாரிகா, நிகாரகுவா, பனாமா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.