புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள, ‘விண்ட் பிளவர்’ சொகுசு விடுதியில்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இங்கு வந்து, நேற்றோடு, 13 நாட்கள் ஆகிவிட்டன. அவர்களின் மிரட்டலுக்கு, பழனிசாமி அரசு பணியவில்லை; கவர்னரும் அழைத்துப் பேசவில்லை. அதனால், ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர் அங்கும் அனுமதி கிடைக்க வில்லை.
இதனால், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யக் கோரி, அரசு கொறடா கொடுத்த புகாரில் நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகர் ‘நோட்டீஸ்’ அனுப்பினார்.
தொகுதி பக்கம் செல்லாததால் அங்கேயும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்படி பல முனை தாக்குதல்களால், புதுச்சேரியில் இருந்து புறப்படும் முடிவுக்கு வந்து விட்டனர். அவர்களிடம் சமாதானம் பேசியும் முரண்டு பிடிக்க துவங்கினர் சிலர் புறப்பட்டும் சென்று விட்டனர். இதனால், தினகரன் கூடாரம் கரையத் துவங்கியது.
இதைடுத்து நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்து எம்.எல்.ஏ.,க்களை சந்தித்த தினகரன் ‘ஓரிரு நாட்கள் பொறுத்திருங்கள் நல்ல முடிவு கிடைக்கும் என கூறிச் சென்றார்.
ஆயினும் நேற்று காலை பல எம்.எல்.ஏ.க்கள் விடுதியை காலி செய்து புறப்பட்டனர்.
தற்போது, விடுதியில் உமா மகேஸ்வரி, ஜெயந்தி பத்மநாபன், பார்த்திபன், பழனியப்பன், சுப்ரமணி, கோதண்டபாணி, ஜக்கையன், செந்தில் பாலாஜி, ஏழுமலை ஆகிய ஒன்பது எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதாகவும் அவர்களும் இன்று காலி செய்து விடுவர் என கூறப்படுகிறது.