நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிய நிலையில் அவசர அவசரமாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு கடினமாக இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
தமிழில் வினாக்கள் கடினமாக இருந்தது, சிபிஎஸ்இ பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களால் +2வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த போதும் பல மாணவர்களால் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க முடியவில்லை. இதனால் தமிழக மாணவர்கள் மருத்துவ தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியுள்ளனர்.
இருப்பிட சான்று இருந்தால் இடம்:-
நீட் அடிப்படையில் நடக்கும் மாணவர் சேர்க்கையில் இந்தியாவில் எங்கு இருந்தாலும் தமிழகத்தில் 5 ஆண்டுகள் படித்திருந்ததற்கான இருப்பிட சான்றிதழ் அளித்தால் அவர்கள் தரவரிசையில் இடம்பெற்று கலந்தாய்வில் பங்கேற்று அரசு ஒதுக்கீட்டு இடத்தை பெற முடியும்.
இது குறித்து அதிகாரிகள் ஆன்லைனில் சரிபார்த்த போது போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
150 பேர் மோசடி:-
இந்த இருப்பிடச் சான்றிதழ் மோசடியில் அடுத்த அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால் ஏறத்தாழ 150 பேர் இது போன்று இரண்டு மாநிலங்களல் இருப்பிடச் சான்றிதழ் அளித்து மோசடியாக கலந்தாய்வில் பங்கேற்க வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்து ஆவணங்கள் திரட்டப்பட்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் மோசடி வேலையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் சம்மன் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.