எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’.
இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா. இன்னொருவர் அஞ்சனா.
இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை பிஜி முத்தையா கையாள, இசையை ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’,’உறுமீன்’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு மேற்கொள்கிறார், எடிட்டிங்கை ஷான் லோகேஷ் கவனிக்க, பாடல்களை பா.விஜய், மீனாட்சி சுந்தரம் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜ் (பாபநாசம், தனி ஒருவன்) செய்ய, சண்டைப் பயிற்சி செய்துள்ளார் விமல்.
இப்படம் இன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்ய பார்க்கப்பட்டது.
இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது,
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும். ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
அதை செய்திகளாகப் படிக்கிறோம். தொலைக்காட்சிகளில் சிசிடிவியினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகப் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அங்கெல்லாம் சென்ஸார் தலையிடுவதில்லை.
அப்போதெல்லாம் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா இல்லையா என யாரும் தடை விதிப்பதில்லை. ஆனால் அதையே மக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுத்தால் பிரம்பை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது சென்ஸார்.
நான் சொல்லியிருக்கும் கதையை இங்கு நடக்கவில்லையென்றோ, அவை சமூக தளங்களில் வலம் வரவில்லையென்றோ சென்ஸார் அதிகாரிகளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் எந்த சான்றிதழும் தராமல் மறுக்க மட்டும் முடிந்திருக்கிறது.
பெண்களுக்கான, சிறுவர்களுக்கான விழிப்புணர்வு படம் இது.
சிகரெட் பிடிக்காதீர்கள் என்பதை சிகரெட் பிடிப்பதுபோல் காட்டித்தானே எச்சரிக்கிறார்கள்? அதுபோல சமூக விரோத சம்பவங்களைக் காட்டித்தான் என் படத்தில் எச்சரிக்கை செய்துள்ளேன். அதற்கு ரிவைஸிங் கமிட்டியா?
ஒரு நல்ல படம் இப்படி பாடாய்ப் படணுமா? சமீபத்தில் ‘தரமணி’ படத்திற்கும் இப்படியொரு கொடுமை நடந்திருக்கிறது. படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் இந்த சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகிறது. இதற்கு வழிகாட்டும் முறையையாவது உருவாக்கித் தாருங்கள் என மிகுந்த மன வருத்தத்துடன் குறிப்பிட்டார் இயக்குநர் ராகேஷ்.