3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வியாபாரி கைது…

Arrest
கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்தவர் அம்சாத்(வயது33). துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் பாலக்காட்டை சேர்ந்த ஒரு பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்து இருந்தார்.

இந்தநிலையில் அம்சாத் கோவை கரும்புக்கடை ஆப்பிள்கார்டனை சேர்ந்த ரஷியா பேகம் என்பவருடைய அண்ணனுடன் நெருங்கி பழகினார். இதனால் அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். ரஷியா பேகம் கணவரை விவாகரத்து செய்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அம்சாத் அந்த வீட்டுக்கு சென்று, தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும், எனவே ரஷியா பேகத்தை மறுமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.

விவாகரத்துக்கான ஆவணங்களை ரஷியா பேகத்தின் குடும்பத்தினர் கேட்டபோது, கோர்ட்டில் இருந்து 3 மாதத்தில் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பி ரஷியா பேகத்துடன் திருமணம் செய்து வைத்தனர். அதன்பின்னர்தான் அம்சாத், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் ரஷியா பேகத்துடன் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

2-வது மனைவி ரஷியா பேகத்தின் 25 பவுன் நகையை விற்று ரெடிமேடு துணிக்கடையை தொடங்கினார். ஒரு காரும் வாங்கினார். அதன்பின்னர் ரஷியா பேகத்திடம் இருந்து நகை, பணத்தை பெற முடியாது என்று தெரிந்தபின்னர் அம்சாத் கொடுமைப்படுத்த தொடங்கினார். இந்தநிலையில் ரஷியா பேகத்தை மிரட்டி கையெழுத்து பெற்று, 3-வதாக ஒரு பெண்ணை கேரள மாநிலம் மன்னார்காட்டில் கடந்த மாதம் 14-ந்தேதி அம்சாத் திருமணம் செய்து கொண்டார்.

இதுபற்றிய விவரம் அறிந்த ரஷியா பேகம் கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மஸுதா பேகம் விசாரணை நடத்தினார். அம்சாத் மீது மோசடி, கொலை மிரட்டல், நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் அம்சாத் மீது புகார் கொடுத்ததால், ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாக துணை போலீஸ் கமிஷனர் லட்சுமியிடம் மற்றொரு புகார் மனுவை ரஷியா பேகத்தின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Response