‘டிமான்டி காலனி’ புகழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, அதர்வா மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் நடிப்பில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. புலன் விசாரணை அதிகாரியாக நடிக்கும் நயன்தாரா நகரில் நடந்த 6 கொலைக்குற்றங்களை விசாரிப்பதும், அதை சுற்றி நடக்கக் கூடிய திகிலான சுவாரசியங்களை கொண்டும் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கேமியோ ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகிறார். மேலும், நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.