ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து: 8 பேர் உடல் கருகி பலி…

bus-fire
பீகார் மாநிலம் நாலந்தாவில் ஓடும் பேருந்தில் தீப்பற்றிய விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர். அம்மாநில தலைநகர் பாட்னாவிலிருந்து 60 பயணிகளுடன், ஷீக்புரா நோக்கி புறப்பட்ட அந்தப் பேருந்து விஸ்வகர்மா சவுக் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் என்ஜினில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றியது. உடனடியாக தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் தீக்கிரையானது. இதனால் பேருந்துக்குள் இருந்து பயணிகள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். சிலர் கண்ணாடி ஜன்னலை உடைத்து குதித்து தப்பியுள்ளனர். அதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயை பீகார் மாநில அரசு நிவாரண உதவியாக அறிவித்துள்ளது. இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response