4 மாத கைக்குழந்தையை கொலை செய்த தாய்:மந்திர சக்தி கொல்லச் சொன்னதாக வாக்குமூலம்..

baby1
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப் நகரில் உள்ள வீடு ஒன்றின் நீர்த்தொட்டியில், நான்கு மாத குழந்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனைக் கண்ட அந்த குழந்தையின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் பிங்கியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

பிங்கியிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் சிலர் தன் குழந்தையை தன்னிடமிருந்து பறித்துக் கொண்டு ஓடியதாக தெரிவித்தார். ஆனால் வீட்டிற்குள் வெளியாட்கள் யாரும் வந்து சென்றதற்கான எந்த தடயமும் காணப்படவில்லை. மேலும் குழந்தை இறந்து கிடந்த நீர்த் தொட்டியின் சாவியும் பிங்கியுடமே இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு பிங்கி மீது சந்தேகம் வலுத்ததால், அவரிடம் விசாரணையை கடுமையாக்கினர். இதில் குழந்தையை நீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாக பிங்கி ஒப்புக் கொண்டார். சில மந்திர சக்தி வந்து தன் மகளை கொல்லச் சொன்னதால், இந்த செயலை செய்ததாக பிங்கி வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மகளின் மரணம், தனது கணவர் மற்றும் 4 வயது மகனுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிங்கி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Response