வருகிற ஜூலை,மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., வரி நடைமுறைக்கு வரும் அப்போழுது, 12 சதவீத வரியின் கீழ் வரும் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜி.எஸ்.டி., வரி கட்டமைப்பு, 5, 12, 18, 28 சதவீதமாக இருக்கும் என கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. தற்போது தங்கத்திற்கு, 10 சதவீத இறக்குமதி வரி; 1 சதவீத வாட் வரி; 1 சதவீத கலால் வரி விதிக்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ‛தங்கத்தின் விற்பனையை, 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்’ என, பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் ‛ஒரு தொழில் நல்ல முறையில் வளர வேண்டும் என்றால், ஜி.எஸ்.டி., மற்றும் இறக்குமதி வரி சேர்த்து, 12 சதவீதத்திற்கு மேல் இருக்க கூடாது. ஏற்கனவே, 10 சதவீத இறக்குமதி வரி உள்ளது. இத்துடன், 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியையும் சேர்த்தால், மொத்தம், 22 சதவீத வரியாகி விடும்,” என, கோட்டாக் மகிந்திரா வங்கியின் உயர் அதிகாரி சேகர் பண்டாரி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இந்திய தங்க நகை கடைகள் சங்க தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில,‛‛ ஏற்கனவே, 10 சதவீத இறக்குமதி வரி உள்ளது. எனவே, தங்கம் மீதான ஜி.எஸ்.டி., வரி 1.25 சதவீதமாக இருக்க வேண்டும். இல்லாவிடில், ஜி.எஸ்.டி., 6 சதவீதம், இறக்குமதி வரி, 6 சதவீதம் என மாற்றி அமைக்க வேண்டும்,” என, தெரிவித்துள்ளார். இதையும் மீறி, தங்கம் மீது, 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டால், தங்கம் விலை உயர்ந்து, அதன் விற்பனை பாதிக்கப்படும் என நகைக்கடைகாரர்கள் தெரிவித்துள்ளனர்.