பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள மதூர் அருகில் சோமஹல்லி பகுதியில் கடந்த செவ்வாய்கிழமையன்று காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் சவி பைக் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ஹெம்மனஹல்லி பகுதியைச் சேர்ந்த நாகசிம்ஹா மற்றும் நிஷாந்த் ஆகியோர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்து கொண்டிருந்த போது சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளர் சவி, அவர்களை தடுத்து நிறுத்தினார். ஹெல்மெட் அணியாமல் வந்த அவர்கள் ரூ.100 அபராதம் கட்ட முன்வந்துள்ளனர். ஆனால், அதனை வாங்காமல் தவறாக பேசியதோடு ஒரு இளைஞரின் சட்டைக்காலரை பிடித்து இழுத்துச்சென்றுள்ளார். மேலும், கன்னத்திலும் அடித்துள்ளார் என்று கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, ஒரு அரசாங்க அதிகாரியை கடைமையை செய்யவிடாமல் தடுத்ததற்காக வழக்கு பதிவு செய்துள்ளார். இதனை நேரில் கண்டவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மூத்த அதிகாரி கூறுகையில், சவி மீது விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீது குற்றம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.