சூப்பர் ஸ்டார் ரஜினியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறாரா லதா ரஜினி..?

கடந்த சில நாட்களாகவே மீடியாக்களில் சூப்பர்ஸ்டாரின் மனைவி லதா ரஜினியின் பெயர் பலமாகவே அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. கடந்த 26ஆம் தேதி திருமுடிவாக்கத்தில் உள்ள லதா ரஜினிக்கு சொந்தமான 2.13 ஏக்கர் நிலத்தை, எக்ஸிம் வங்கி கையகப்படுத்தி உள்ளது.

கோச்சடையான் படம் சம்பந்தமாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயன்மென்ட் தொடர்ந்த வழக்கில் லதா ரஜினி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள திருமுடிவாக்கத்தில், தனக்கு சொந்தமான ரூ. 22,21,85,865 கோடி மதிப்புள்ள சொத்தை சொத்தை பிணையாக கொடுத்திருந்தார் என்று சொல்லப்பட்டது

வங்கியின் அறிவிப்பு குறித்து ஒரு ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியில், மீடியா ஒன் நிறுவனம் கடந்த ஜூலை-17க்குள் தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை வங்கியில் திரும்ப செலுத்தவில்லை.. கெடு முடிந்ததும் அதை செலுத்தும்படி கூறி வங்கி கொடுத்த 6௦ நாட்கள் அவகாசத்தையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. அதனால் தான் இந்த நடவடிக்கை என்றும் அதன்படி பிணையாக கொடுக்கப்பட்ட லதா ரஜினியின் மேற்கூறிய இடத்தில் உள்ள சொத்தை யாரும் வாங்கவோ, விற்கவோ கூடாது என வங்கி அறிவித்துள்ளது.

ஆனால் சில தினங்களுக்கு முன் மீடியாக்களை சந்தித்த மீடியா ஒன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முரளி மனோகர், லதா ரஜினி எங்களுக்கு பொருளாதார உதவி செய்யும் நிமித்தம், ஒரு கேரண்டராக மட்டுமே தனது சொத்தை அளித்தார் என குறிப்பிட்டார். ஆனால் அது சம்பந்தமான சில டாக்குமெண்ட்டுகளை படித்துப்பார்த்தபோது, மீடியா ஒன் நிறுவனம் வங்கியில் கடன் பெறுவதற்கே லதா ரஜினிகாந்த் சில வங்கிகளிலும், தனி நிறுவனங்களிடமும் ஜாமீன்தாராரக கையெழுத்து போட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு மட்டுமல்ல, இதனை தவிர்த்தும் லதா ரஜினி மீது, சில ஏமாற்றுதல் மற்றும் மோசடி தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவையெல்லாம் வெளியே தெரிய வந்துள்ள ஒருசில வழக்குகள் தான். ஆனால் இதுபற்றி கேள்விப்பட்ட ரஜினிகாந்தின் உயிருக்குயிரான ரசிகர்கள், “ரஜினியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறாரா லதா ரஜினி?” என கொந்தளிக்கின்றனர். சொல்லப்போனால் ரஜினியின் மீது எந்த கெட்டபெயரும் வந்துவிடக்கூடாது என்று ஒரு ரசிகன் கவலைப்படும் அளவுக்கு கூட அவரது மனைவி லதா ரஜினி கவலைப்படுவதாக தெரியவில்லை என்ற பேச்சும் காதில் விழத்தான் செய்கிறது.

உண்மையில் இது சோதனையான நேரம் தான். இந்த நேரத்தில் தான் லதா ரஜினி தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட நேர்மையாக என்னசெய்ய வேண்டுமோ அதை செய்து தனது கணவரின் நன்மதிப்பை காப்பாற்றுவதோடு, இதன் மூலம் ரஜினி கடந்த நாற்பதாண்டு காலமாக சேர்த்துவைத்துள்ள நற்பெயருக்கு நேர்ந்துள்ள களங்கத்தையும் துடைக்கவேண்டும். முன் வருவாரா லதா ரஜினி..?