கோடிகளை கேட்டு விஜய்சேதுபதிக்கு மிரட்டல் விடும் தயாரிப்பாளர்…!

ஒரு நடிகர் வளர ஆரம்பித்தாலே பிரச்சனைகளும் அவரைச்சுற்றி வளர ஆரம்பிக்கும் என்பது நாம் பலகாலமாக பார்த்து வருவதுதான். சிவாகார்த்திகேயனை சுழன்றடித்தது ஒரு வகையான பிரச்சனை என்றால் விஜய்சேதுபதியோ வஐமாதிரியான பிரச்சனையில் சிக்க்யுள்ளது இப்போது அவரது அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில் ‘வசந்தகுமாரன்’ என்ற பெயரில் ஒரு பட அறிவிப்பு வெளியானது உங்களுக்கு தெரியும். ஸ்டுடியோ-9 ஆர்.கே.சுரேஷ் என்பவர் தயாரிப்பதாக சொல்லப்பட்ட இந்தப்படத்தில் தற்போது தான் நடிக்கவில்லை என்று கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி.

அந்த அறிக்கையில், “நான் ‘வசந்தகுமாரன்’ படத்தில் இருந்து விலகிவிட்டேன். காரணம் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷின் நடவடிக்கைகளும் தகாத வார்த்தைகளும் தான். அதனால் அவர்கள் படத்தில் இருந்து நான் விலகுவதாக கூறி அவர்களிடம் வாங்கிய 9 லட்சம் ரூபாயை திருப்பித்தருவதாகவும் அன்றே சொல்லிவிட்டேன்.

அதன்பிறகு தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் முறையிட்டு அவர்கள் முன்னிலையில் படத்தில் இருந்து என்னை முழுவதுமாக விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டேன்.. ஆனால் சுரேஷோ என்னிடம் கோடிகளில் பணம் கேட்டு மிரட்டுகிறார். அதுமட்டுமல்ல ஒரு நாளிதழில் நான் நடிப்பதாக ‘வசந்தகுமாரன்’ விளம்பரத்தையும் கொடுத்துள்ளார்.

தற்போது ஜனநாதனின் இயக்கத்தில் ‘புறம்போக்கு’ படத்தில் நடித்துவரும் நான் அடுத்ததாக தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறேன். இதனால் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் இப்படி செயல்படும் சுரேஷை சட்ட ரீதியாகவும் தொடர்ந்து மிரட்டல் விடுத்தால் காவல்துறை ரீதியாகவும் சந்திக்க இருக்கிறேன்” என வேதனையுடன் கூறியுள்ளார் விஜய்சேதுபதி.