நவ-7ல் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை துவக்கும் கமல்..!

காந்தி ஜெயந்தியான அக்-2ஆம் தேதி நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மையான பாரதம்’ என்கிற பிரச்சாரத்தை துவங்கி வைத்தார். இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற என்னத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்த பிரச்சாரம் மக்களிடம் சென்றடைய இந்தியாவில் உள்ள சில பிரபலங்களையும் இந்த பிரச்சாரத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அந்தவகையில் தமிழ்நாட்டில் உலகநாயகன் கமலுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதை கமலும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தனது பிறந்தநாளான நவ-7ஆம் தேதி சென்னையில் உள்ள நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியை ஆரம்பித்து வைக்கிறார். இந்தப்பணியினை மேற்கொள்பவர்கள் கமலின் நற்பணி இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் தான்.

இந்த சுத்தப்படுத்தும் திட்டத்தை முதலில் தாம்பரம் வேளச்சேரி சாலையில் ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பு அருகில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து தொடங்க இருக்கின்றனர். இந்த சமயத்தில் கமல் அவர்களுடன் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்த இருக்கிறார். அவருடன் அவருடைய திரையுலக நண்பர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.