‘சரித்திரத்தில் ஒரு ஈ’ குறும்படம் – விழாக்களுக்கு அனுப்ப ‘பீட்சா’ இயக்குனர் ஊக்கம்..!

ஒரு குறும்படம் திரையிடும் விழாவையே பிரம்மாண்டமாக நடத்த முடியுமா..? முடியும் என நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் ‘சரித்திரத்தில் ஒரு ஈ’ என்கிற குறும்பட குழுவினர். இரண்டு தினங்களுக்கு முன்னால் பிரசாத் லேபில் ‘சரித்திரத்தில் ஒரு ஈ’ என்கிற குறும்பட வெளியீட்டு விழா நடந்தது..

படம் தான் குறும்படமே தவிர விழா என்னவோ சினிமா விழாக்களை மிஞ்சும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடந்தது.. இந்த குறும்படத்தில் நடித்த ஹீரோவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து பேண்டு வாத்தியங்களுடன் வரவேற்பு நடந்ததை வைத்தே மீதியை நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள்.

விழா மட்டுமல்ல.. அந்த குறும்படத்தையும் ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு என அதன் மேக்கிங்கில் சினிமாவுக்குரிய தரத்துடன் மிரட்டியிருந்தார்கள். அடுத்து ஒரு புதிய குறும்பட டீம் வெள்ளித்திரைக்குள் நுழைய தயார்..

இந்த விழாவில் இயக்குனர் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் பாபி சிம்ஹா உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த குறும்படத்தை பாராட்டி பேசும்போது, “இதில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் ஒரு சில விஷயங்களை மட்டும் கட் பண்ணிவிட்டு இதை குறும்பட திருவிழாக்களுக்கு அனுப்பி வையுங்கள். இதற்கு நல்ல மரியாதை அங்கே கிடைக்கும்” என ஊக்கப்படுத்தினார்.