ரஜினி பேரை மறந்த பாலசந்தர்…!

ரஜினி காலத்திலேயே அவருக்கு சமமான புகழுடன் நடித்துவந்த விஜயகாந்த்துக்கும் சத்யராஜுக்கும் இன்றுவரை ஒரு மிகப்பெரிய மனக்குறை ஒன்று உண்டு. அது இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் படத்தில் கதாநாயகனாக நடிக்காததுதான். ஆனால் இன்னொரு வகையில் பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நட்புக்காக ஒரே ஒரு பாடலில் கெஸ்ட் ரோலில் ரஜினியுடன் சேர்ந்து ‘வங்காளக்கடலே’ என்ற பாடலுக்கு மட்டும் ஆடி திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற ‘தகடு தகடு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போது அதில் கலந்துகொண்ட பாலசந்தர் சத்யராஜ் பற்றி குறிப்பிடும்போது, “இவர் என் படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை.. ஆனாலும் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நட்புக்காக ஒரே ஒரு பாடலில் சுகாசினியுடன் கெஸ்ட் ரோலில் ஆடிக்கொடுத்தார். அதில் இன்னும் இரண்டு நடிகர்கள் ஆடினார்கள். அவர்கள் பெயர் என்ன என்பது எனக்கு சரியாக ஞாபகத்தில் இல்லை…” என குறிப்பிட்டார்.

அப்போது சத்யராஜ் எழுந்து அவரிடம் ரஜினி மற்றும் விஜயகாந்த்தின் பெயர்களை சொன்னபிறகுதான் அவருக்கு ஞாபகம் வந்தது. இதே சத்யராஜ் பாலசந்தருக்கு முன் பேசியபோதே அவரின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததை குறிப்பிட்டு சொன்னதால் தான், பாலசந்தர் பேசும்போது சத்யராஜ் என்கிற பெயரை ஞாபகமாக முதலில் குறிப்பிட்டார். இல்லையென்றால் சத்யராஜ் பெயரும் ஞாபகம் இருந்திருக்காது என்றுதான் சொல்லவேண்டும். வயது மனிதர்களிடையே எப்படி மறதியை கொண்டுவந்து விடுகிறது பார்த்தீர்களா..?