முக நூல் சொந்தங்களின் தலைமையில் இளம் கவிஞர் மதுரை சத்ய ப்ரியாவின் ‘பேனா முனைப் பிரபஞ்சம்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கத்தில் ஜூலை 5ம் தேதி சனிக் கிழமை மாலை 5 மணிக்கு நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து,’ஹரிதாஸ்’ திரைப்படத்தின் வசனகர்த்தா வெங்கடேசன் அவர்கள் விழாவை சிறப்பாக தொடங்கி வைத்தார். கல்கி உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்த, அதன் பிறகு புத்தக வெளியீடு நடைபெற்றது.. மதிற்பிற்குரிய தமிழ் அறிஞர் பாடாலசிரியர் திரு வாலறிவன் குமார் அய்யா அவர்கள் முதல் பிரதியை வெளியிட அதை திரைப்பட நடிகர் ரஞ்சித் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு அழைப்பாளர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் வெங்கடேஷ் ஆறுமுகம், காமடி நடிகர் பயில்வான் ரங்கநாதன், பாடலாசிரியர் அண்ணாமலை, திரைப்பட இயக்குனர் பா.ஜெயகார்த்திக், பாடலாசிரியர் திரு முருகன் மந்திரம் மற்றும் முகநூல் பிரபல பதிவாளர்கள் கவிஞர் நிலா பாரதி, கவிஞர் யாத்விகா என பலர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கல்கி அமிர்தம் சூர்யா அவர்கள் பேசுகையில் “ஒரு கவிஞரின் படைப்பில் அவருடைய அனுபவம் மட்டுமே இருக்காது. காதலைப் பற்றி ஒரு கவிஞர் எழுதியிருக்கிறார் என்றால், அது அவரது காதலாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அவரைப் பாதித்த, அவர் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் காதலாகவும் இருக்கலாம். படைப்பாளிகளின் படைப்புகள் பெரும்பாலும் புறம் சார்ந்தே எழுதப்படும்” என்பதை மேற்கோள் காட்டினார். இதே போல் பாரதிய ஜனதா கட்சியின் இலக்கிய அணித் தலைவரும், இயக்குநருமான ஷர்மா பேசும்போது, வளரும் இளம் கவிஞர்களை பற்றியும், அவர்களது திறமைகளைப் பற்றியும் பேசினார். நடிகர் ரஞ்சித் பேசும்போது, ”சத்ய ப்ரியாவின் கவிதைகள் காதலை மட்டுமல்ல, சமூகத்தையும் வலம் வந்திருக்கின்றன” என்றார். கவிஞர் வாலறிவன் குமார் அய்யா அவர்கள் பேச்சைத் தொடர்ந்து இறுதியாக கவிஞர் சத்ய ப்ரியாவின் நன்றியுரையோடு விழா முடிவுற்றது.
சத்ய ப்ரியா முகநூல் வழியாக தன் கவிதை ஆற்றலை வெளியுலகு அறியச் செய்தவர். ‘பேனா முனைப் பிரபஞ்சம்’ கவிதைத் தொகுப்பு அவரின் முதல் படைப்பு. வெளியூர்களிலிருந்து ஏராளமான முகநூல் நண்பர்கள் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள் என்பதால், அரங்கம் கொள்ளாத அளவிற்கு கூட்டம். கவிதைப் புத்தக வெளியீடு என்றாலும், கலகலவென காமடியாகவும், விறுவிறுவென சீரியஸாகவும் விழா அமைந்திருந்தபடியால், இறுதிவரையிலும் கூட்டம் கலையாமல் அரங்கு நிறைந்த காட்சியாக தொடங்கி, அரங்கு நிறைந்த காட்சியாகவே விழா முடிவுற்றது.