நயன்தாரா, சந்தானம் வரிசையில் புரமோஷன் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் த்ரிஷா..?

நேற்று (30 ஜூன் 2014) ‘பூலோகம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தபோது அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.. ஆனால் கதாநாயகி த்ரிஷா மட்டும் வரவில்லை. த்ரிஷா வராததற்கு அவர் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார் என ஜெயம் ரவி காரணம் சொன்னார். ஆனாலும் நயன்தாரா வரிசையில் த்ரிஷாவும் தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்க்க ஆரம்பித்துவிட்டார் என்றுதான் தெரிகிறது.

ஆனால் அதேசமயம் ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ‘அமரகாவியம்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர் நயன்தாராவும் த்ரிஷாவும். நட்புக்காக கலந்துகொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் இவர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளரும் இவர்களுக்கு கேட்ட தொகையை கொடுத்து தானே ஒப்பந்தம் செய்கிறார். அப்புறம் அதற்கு மட்டும் வரமாட்டேன் என்றால் எப்படியாம்..?

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ‘வாலிபராஜா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல் கலந்துகொண்டு விழா முடியும் வரை பொறுமையாக அமர்ந்திருந்து படக்குழுவினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசிவிட்டுப்போனார்.

ஆனால் அந்தப்படத்தின் கதாநாயகன் ரேஞ்சில் நடித்திருக்கும் சந்தானம் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. ஹைதராபாத்தில் ரஜினியுடன் லிங்கா படப்பிடிப்பில் இருந்ததால் வரமுடியவில்லை என்று சொன்னார்கள். இருந்தால் என்ன? எத்தனையோ கதாநாயகர்கள் ஐந்து மணிக்கு சூட்டிங் முடித்துவிட்டு விமானத்தில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறுநாள் படப்பிடிப்பிற்கும் சென்று கலந்துகொண்ட முன் உதாரணங்கள் நிறைய இருக்கிறதே..

இன்றிருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தின் பிசினஸ், பப்ப்ளிசிட்டி எல்லாமே அந்தப்படத்தின் முக்கிய நடிகர் நடிகைகள், இயக்குனர்களை மையப்படுத்தியே இருக்கின்றன. அப்படி இருக்கும்போது நயன்தாரா, சந்தானம் போன்று த்ரிஷாவும் புறக்கணிக்கும் செயலில் இறங்கிவிட்டாரோ என்கிற ஐயம் தான் ஏற்படுகிறது.