தமிழ் சினிமாவில் 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உலக சாதனைப் புரிந்த இயக்குநர் ராம.நாராயணன், சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், நடிகர்கள் கமலஹாசன், சத்யராஜ், நாசர், கவுண்டமணி, சிபிராஜ், விஜயகாந்த், ராமராஜன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே ராம.நாராயணன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இரங்கல் செய்தி விடுத்தனர்.
மேலும், ராம.நாராயணன் மறைவையொட்டி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.