என்னிடம் ஆர்யா பேசவில்லை – தம்பியின் வருத்தம்

Sathya

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவும் நடிக்க வந்து, ‘புத்தகம்’ என்ற படத்தில் நடித்தார். தோல்விப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்த கதைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார் சத்யா. இதில் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தவர் அண்ணன் ஆர்யா. தம்பிக்காக ‘நான்’ பட இயக்குனர் ஜீவா சங்கரை வைத்து அமரகாவியம் படத்தை தயாரித்தார்.

விரைவில் வெளிவர உள்ள ‘அமரகாவியம்’ படத்தை பார்த்த சில திரை உலக பிரமுகர்கள், “சத்யா அடுத்த தலைமுறை நடிகர்களில் முக்கியமானவர்” என புகழ்ந்துள்ளனாராம்.

‘அமரகாவியம்’ பற்றியும், சகோதரர் ஆர்யா பற்றியும் சதாம் பேசும்போது, “இயக்குனர் ஜீவா சங்கர் எங்களது நெருங்கிய குடும்ப நண்பர், அதனால் அமரகாவியம் கதையை கேட்கும் பாக்கியம் எனக்கு பல முறை கிடைத்தது. மனதில் சற்று பொறாமையுடன் அந்த கதைக்கு நானே பல்வேறு நாயகர்களின் பெயரை சிபாரிசு  செய்தேன். திடீரென ஒரு நாள் ஆர்யா என்னிடம் நான் அந்த கதையை தயாரிக்க போகிறேன், நீ நடிப்பாயா என கேட்டபோது எனக்கு தலைகால் புரியவில்லை.

இந்த கதை நிச்சயமாக எனக்கு ஒரு நடிகனாக அடையாளம் தரும் என நம்பிக்கையோடு உடனடியாக சரி என்றேன். ஆர்யா படம் பார்த்தபோது நான் வெளி நாட்டில் இருந்தேன். அவருடைய கருத்தை அறிய ஆவலுடன் இருந்தேன். என்னை பற்றி எல்லோரிடமும் பேசிய ஆர்யா என்னிடம் மட்டும் பேசவில்லை. இது என்னுடைய பரபரப்பை கூட்டியது. என்னுடைய அலைபேசியில் அவர் பெயர் Flash ஆகும்போது என்னுடைய படபடப்பு கூடியது.

அவர் என்னிடம் ‘நான் உனக்காக சந்தோஷப்படுகிறேன். பெருமை அடைகிறேன். நான் தயாரிப்பாளராக வெறும் முதலீடு செய்பவனாக மட்டும் இல்லாமல், படத்தை பெரும் வெற்றி படமாக்க பல திட்டங்கள் வைத்து இருக்கிறேன்’ என்றார். ஆர்யாவை பற்றி நான் அறிந்த வரை, அவர் எதிலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என சிந்திப்பவர், அதன் அடிப்படையில் இந்த மாதம் 28ஆம் தேதி  ‘அமர காவியம்’  படத்தின் இசை வெளியீட்டு விழா மிக வித்தியாசமாக இருக்கும்” என்றார் சத்யா.