சென்னையில் நடந்த ஐபிஎல் போராட்டத்தின் போது, போலீஸாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது, போலீஸ் ஒருவர் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரால் சரமாரியாகத் தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த மே 31ம் தேதி எண்ணூரைச் சேர்ந்த மதன் குமார் என்பவரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதன்குமார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மதன்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.