முழுக்க துபாயிலேயே படமான “மணல் நகரம்’

unnamed (40)

பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லும் திரையுலகினர் மத்தியில் ஒரு முழுப்படத்தையே, பாலைவன சொர்க்கமாக கருதப்படும் வளைகுடா நாடான துபாயில் முழுக்க முழுக்க உருவாக்கியுள்ளனர். ‘மணல் நகரம்’ என்ற இந்த படத்தை நடிகரான ‘ஒருதலைராகம்’ சங்கர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் சில படங்களை இயக்கியுள்ளவர். டிஜேஎம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த் குமார் தயாரித்துள்ளார்.

துபாயில் மூன்று நண்பர்கள் குடும்ப வறுமையால் இந்தியாவிலிருந்து பிழைப்புக்காகச் சென்று வேலைபார்த்து வருகிறார்கள். ஒரே அறையில் தங்கி வசிக்கிறார்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பேதம் மறந்து ஒன்றாக இருக்கிறார்கள். துபாயில் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அவர்கள் அதிலிருந்து மீள்வதற்குப்படுகிற போராட்டம்தான் கதை.

நம் நாட்டைப் போன்றதல்ல துபாயின் சட்ட திட்டங்கள். இந்தியா போல அங்கு எளிதில் பெயிலில் வரமுடியாது. ஏதாவது வழக்கென்றால் அரபி மொழி தெரிந்த வழக்கறிஞரை வைத்துதான் வாதாட முடியும். அதனால் தகவல் தொடர்பு பிரச்சினை இருக்கும். வழக்கறிஞர் கட்டணம் மிக அதிகம். இதுபோல பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஏதாவது பிரச்சினை வழக்கு என்று போய்விட்டால் சமாளிப்பது வெளிவருவது சாதாரண விஷயமல்ல. அதையும் சொல்கிறது படம்.

இந்த படத்திலும், நட்பு, காதல் எல்லாம் உள்ளன. துபாயில் ஒரு பெண்ணைக் காதலிப்பதால் காதலர் இருவர் சந்திக்கும் பிரச்சினைகளும் காட்டப்பட்டுள்ளன.

வெயில் தேசமான துபாயில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் பற்றி இயக்குநர் சங்கர் கூறும்போது, “துபாயில் இருக்கும் கடுமையான சட்டங்களால், படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குவது கூட முன்பு போல இப்போது இல்லை. சிலர் அங்கு படமெடுத்துவிட்டு வெளியேபோய் அதை தவறாக சித்தரித்ததுண்டு. தவறான காட்சிகளுக்கு நாட்டை பயன்படுத்தி இருப்பது கண்டு விதிகள் கடுமையாக்கி இருக்கிறார்கள். அதனால் அங்கு படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்றால் எங்கு எடுக்கப் போகிறோம் என்ன காட்சி என்று சொல்ல வேண்டும். படத்தின் முழு கதையையும். அரபியில் மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும் அதைப் படித்து நம்மை படப்பிடிப்புக்கு அனுமதிப்பது பற்றி அந்த மீடியா ஆய்வுக் குழுதான் முடிவு செய்யும்” என்றார்.

 

படத்தைப் பொறுத்தவரை நடிப்பதற்கென்று இந்தியாவிலிருந்து மூன்றே பேர்தான் போயிருக்கிறார்கள். மற்ற அனைவரும் துபாய் நாட்டில் உள்ளவர்களே. இங்கிருந்து நாயகன் ப்ரஜின், நாயகி தனிஷ்கா, கௌதம் என மூவர் மட்டுமே சென்றுள்ளனர்.

நாயகனான ப்ரஜின்  சன்டிவி வீடியோ ஜாக்கியாக இருந்தவர். தமிழில் ‘தீக்குளிக்கும் பச்சைமரம்’ படத்திலும் மலையாளத்தில் ‘த்ரில்லர்’ ‘டோர்னமெண்ட்’ படங்களிலும் நடித்து இருப்பவர்.

ஒரு நாயகியான தனிஷ்கா பெங்களூர்க்காரர். கன்னடத்தில் 10 படங்கள் நடித்துள்ளவர். இன்னொரு நாயகியாக நடிக்கும் வருணா ஷெட்டி துபாயில் பிறந்து வளர்ந்தவர். அவரைத் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். நாயகன் நண்பனாக உடன் வரும்   ஜேம்ஸ் என்கிற முக்கிய பாத்திரத்துக்கும் துபாயிலுள்ள ஒருவரையே தேர்வு செய்து பயன்படுத்தியுள்ளார்கள். பிற துணைப்பாத்திரங்கள், கூட்டம், கும்பல் எல்லாம் அங்குள்ளவர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு ஸ்ரீதர், இசை ரெனில் கௌதம், பாடல்கள் – மணிபாரதி, ராஜ்கண்ணன், தமிழமுதன், வசனம்-ஆர்.வேலுமணி, படத்தொகுப்பு- எஸ்பி.அகமத், நடனம்- சோனி மோகோஸ், ஜீவித், ஸ்டண்ட்- ராஜேஷ் கண்ணா.

துபாயில் 52 நாட்கள் நடத்தி படப்பிடிப்பு முழுப்படத்தையும் எடுத்து முடித்து உள்ளனர். கதை முழுதும் துபாயில்தான் நடக்கிறது. துபாயில் சிரமப்படும் பாத்திரங்களின் குடும்பச் சூழல் காட்ட மட்டும் சில நிமிடங்கள் மட்டுமே இந்தியா காட்டப்படும்.

இயக்குநர் சங்கர் கூறும்போது, “படக்கதை நடந்த உண்மைக்கதையின் அடிப்படையிலானது. எல்லாவற்றையும் கற்பனையாகக் காட்டலாம். ஆனால் துபாயை கற்பனையாகக் காட்ட முடியாது. துபாய் என்பது இந்தக்கதைக்கு மிகவும் வலுவான பலமான பின்புலமாக இருக்கும். அது ஒரு பாத்திரம் போலவே தோன்றும். எனவே அங்கு படமெடுப்பது என்று முடிவுசெய்து எடுத்தோம்.

கொளுத்துகிற வெயிலில்  வெளியில் சாலைகளில் கூட்டங்களில் எல்லாம் சிரமப்பட்டு எடுத்தோம். நடிகர்களுக்கு கேரவன் எல்லாம் இல்லை. காருக்குள்ளேயே உடைமாற்றி ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்படி அத்தனைபேரும் ஒத்துழைத்து உதவி இருக்கிறார்கள்.” என்றார்.