இயக்குனர் சசிக்குமாரிடம் வாய்ப்பு தேடி சென்ற பாலுமகேந்திரா:

இயக்குனர் பாலுமகேந்திரா சமீபத்தில் இயக்கியுள்ள திரைப்படம் “தலைமுறைகள்”. இந்த திரைப்படத்தில் சின்னத்திரை நடிகர் சசிகுமார், நடிகைகள் ரம்யா ஷங்கர், வினோதினி, மாஸ்டர் கார்த்திக், ஷக்தி, ரயில் ரவி, தில்லை பெருமாள் மற்றும் ஆர்யன் நடிக்கிறார்கள். இயக்குனர் பாலுமகேந்திராஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், இந்த படத்தை தயாரித்துள்ள இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமார் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப்பில் நேற்று (01 டிசம்பர் 2013) அன்று நடைபெற்றது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய படத்தின் இயக்குனர் பாலுமகேந்திரா, தான் இயக்குனர் சசிகுமரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரை சந்திக்க விரும்புவதாக கூறினார். அவருடன் பேசிய சசிக்குமார், தான் வந்து சந்திப்பதாக தெரிவித்ததாகவும் அதை பாலுமகேந்திரா நிராகரித்துவிட்டு தான் சென்று சந்தித்ததாக தெரிவித்தார். சசிக்குமாரை சந்தித்த பாலுமகேந்திரா தன்னுடைய “தலைமுறைகள்” படத்தின் கதை சுருக்கத்தை இயக்குனர் சசிக்குமாரிடம் சொல்லி, அவரை இந்த படத்தை தயாரிக்க முடியுமா என்று கேட்டதாக தெரிவித்தார். கதையை கேட்ட இயக்குனர் சசிகுமார் எந்த வித மறுப்புமின்றி “தலைமுறைகள்” படத்தை தான் தயாரிப்பதாக தெரிவித்ததாக இயக்குனர் பாலுமகேந்திரா தெரிவித்தார்.

இயக்குனர் பாலுமகேந்திரா “தலைமுறைகள்” திரைப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டுள்ளதாகவும் அதை சில தயாரிப்பாளர்கள் நிராகரித்ததாகவும், பல தயாரிப்பாளர்கள் நழுவி கொண்டதாகவும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு. என்ன தான் பல விருதுகள் பெற்ற ஒரு திறமைவாய்ந்த இயக்குனராக இருந்தாலும், ஒரு முறை தோல்வியை சந்தித்தால் அடுத்த ஒரு படத்தை இயக்குவதற்கு பல தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்கவேண்டிய கட்டாயத்தில் தான் இயக்குனர்கள் உள்ளனர் என்பது உண்மை.