‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், நஸ்ரியா. நடித்து ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் மிகவும் பிரபலமாகி, முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இவர் ஆர்யா ஜோடியாக நடித்த ‘ராஜாராணி’ படம், நாளை திரைக்கு வர இருக்கிறது.
இதுகுறித்து நஸ்ரியா அளித்த ஒரு பேட்டியில்,” ‘ராஜா ராணி’ படத்தில் ‘கீர்த்தனா’ என்ற அலுவலகம் செல்லும் பெண்ணாக வருகிறேன். படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும்.
எனக்கும், ஜெய்க்கும் இடையே காதல் கிடையாது. ஜெய், ஒரு நல்ல நண்பர். படப்பிடிப்பின்போது அவரிடம் பேசுவதுடன் சரி. ஏதாவது நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டாலும் அவருடன் பேசிக்கொள்கிறேன். எங்களுக்கு இடையே உள்ள உறவு, அவ்வளவுதான்.
‘ராஜாராணி’யை அடுத்து, என் நடிப்பில் ‘நய்யாண்டி’ படம் வெளிவரும். இந்த படத்தை அடுத்து, ஜீவா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன்.
நயன்தாரா இடத்தை நான் பிடித்து விட்டதாக பேசப்படுகிறது. யாருடைய இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது. நான், நயன்தாரா ஆக முடியாது. நயன்தாரா நானாக முடியாது. ஒரு ‘சீனியர்’ நடிகை என்ற முறையில், அவர் மீது எப்போதுமே மரியாதை வைத்து இருக்கிறேன்” என்றார்.