இந்திய சினிமா நூற்றாண்டு விழா வருகிற 21–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தென்னிந்தியாவில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை சேர்ந்த சினிமா கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பங்கேற்கிறார். இது தவிர நிறைவு நாள் விழாவில் நான்கு மாநில முதல்வர்களும் மேடையை அலங்கரிக்கவிருக்கிறார்கள்.
நூற்றாண்டு விழாவையொட்டி 21–ந்தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ், நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் 22–ந்தேதி காலை கன்னட நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 22–ந்தேதி மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23–ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கின்றன. நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, காஜல்அகர்வால், ஹன்சிகா, அனுஷ்கா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனம் ஆடுகின்றனர்.
நூற்றாண்டு விழாவையொட்டி சினிமா படப்பிடிப்புகள் 24–ந் தேதி வரை 7 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. வெளியூர் படப்பிடிப்புகளில் இருக்கும் நடிகர், நடிகைகள் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.