பல்வேறு பொழுதுபோக்கு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி தேசிய விருது, பிலிம்பேர் ஆகிய விருதுகளை அள்ளினார். ‘கொலவெறி’ பாடலுக்குப் பிறகு பாடகராகவும் மாறி நிறைய பாடல்களை பாடியுள்ளார். மிகவும் பிரபலமாகியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் மத்தியில் அவருக்கு மவுசும் அதிகரித்து வருகிறது.
அவர் நடிக்காவிட்டாலும் கூட, ஒரு பாடலில் பாடும்படி இசையமைப்பாளர்கள் அவரை அணுகி வருகின்றனர். அந்த வகையில், செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்‘ படத்திலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
குறிப்பாக அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு குறைந்தபட்சம் ஒரு பாடலாவது பாடும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தான் நடிக்கும் நய்யாண்டி படத்திலும் ஒரு பாடலைப் ஜிப்ரான் இசையில் பாடி அசத்தியிருக்கிறார் தனுஷ். அந்தப் பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.