பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா நடித்து தங்கர்பச்சான் இயக்கியுள்ள ‘களவாடிய பொழுதுகள்’, செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி பிரபுதேவா, தங்கர் பச்சான், பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்து ஆகிய மூன்று பேரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.
அப்போது பிரபுதேவா கூறியதாவது, ‘‘தங்கர்பச்சான் டைரக்ஷனில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோது, அவருடைய சுபாவத்துக்கும், உங்கள் சுபாவத்துக்கும் ஒத்துப்போகுமா? என்று சிலர் பயமுறுத்தினார்கள். கதை எனக்கு பிடித்து இருந்ததால், நடிக்க சம்மதித்தேன்.
படப்பிடிப்பின் போது அவர் என்னுடன் பழகிய விதத்தில் நெகிழ்ந்து போனேன். அவர் எனக்கு பிடித்த டைரக்டராகி விட்டார். ‘களவாடிய பொழுதுகள்’ என் பாணி படம் அல்ல. நான் நடித்த படங்களிலேயே மிக வித்தியாசமான படம்.
இந்த படத்தில் தங்கர் பச்சான் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை அப்படியே செய்தேன். இன்னும் நான் முழு படத்தையும் பார்க்கவில்லை. ‘டப்பிங்’கின் போது பார்த்ததோடு சரி. படம் நன்றாக வந்திருக்கிறது. இப்போது என்ன தமிழ் படத்தில் நடிக்கிறீர்கள்? என்று மும்பையில் என்னிடம் கேட்பவர்களிடம், இந்த படத்தை பற்றித் தான் சொல்வேன்.
படத்தை திரைக்கு கொண்டு வருவது பற்றி தங்கர்பச்சான் என்னிடம் அடிக்கடி பேசுவார். நானும் பேசுவேன். படம், அடுத்த மாதம் திரைக்கு வருவதில் எனக்கு சந்தோஷம்’’ என்றார்.