சில வருடங்களுக்கு முன்பு அதாவது 2007-ல் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் பிரமாண்ட பேனர்கள் சென்னை மாநகரை அலங்கரித்து. அதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு சினிமா மற்றும் வணிக ரீதியான பேனர்கள் மற்றும் பிரமாண்ட விளம்பர பலகைகளை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்க கூடாது என்றும், வைத்தாலும் அதிகபட்சம் மூன்று நாட்கள் மட்டுமே வைத்து, பின் அகற்றிவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதற்கு அரசிடமிருந்து எழுத்துபூர்வமாக அனுமதி கடிதம் பெறவேண்டும். அரசியல் கட்சிகள் கூட இரண்டு மூன்று நாட்களில் பேனர்களை அகற்றி விடுகிறது. இந்த மாதிரி பேனர்கள் வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடித்து, விபத்துகள் உருவாவதற்கு காரணமாகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் மிஸ்ரி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் தலைவா படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பிரமாண்டமான, அகலமான பேனர்கள் சென்னை நகரின் முக்கிய சாலைகளிலும், பெரிய கட்டிடங்களின் மேலும் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி சட்ட அதிகாரியிடம், பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு அவர் ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள சொன்னார். சென்னை மாநகரில் பேனர்கள் வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் சார்பில் எந்த அனுமதியும் கோரப்படவும் இல்லை, நாங்கள் அனுமதியும் கொடுக்கவில்லை என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றவும், சட்டத்தை மீறியவர்கள் மீது தகுந்த நடவடிக்கையும் எடுப்பார்களா சம்பந்தபட்ட அதிகாரிகள்?