போருக்குப்பின் இலங்கையை பற்றி சொல்லும் ஆறாம் நிலம் – திரைவிமர்சனம்

இயக்கம் – ஆனந்த ரமணன்
நடிகர்கள் – நவயுகா, சிறுமி அன்பரசி, மன்மதன் பாஸ்கி

கதை – போருக்கு பிந்தைய ஈழ நிலத்தில் தாய் தமிழ் மக்களின் நிம்மதியற்ற வாழ்வின் பதிவு தான் இப்படம்

ஈழத்திற்க்கும் தமிழ்மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் தாய் தமிழ் மக்களின் போரால் எந்தளவு பாதிக்கப்பட்டது என்பது அப்போதைய காலகட்டத்தில் பரபரப்பு செய்தியாக இருந்தது. ஆனால் போர் முடிந்த பிறகு அம்மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வை வலியை அழுத்தமாக சொல்லியிருக்கிறது இப்படம். அவர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஈழத்தை வைத்து இது வரையிலும் உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை காட்டப்படாத ஒரு களம் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் போருக்குப் பிந்திய பத்தாண்டுகளின் பின்னும்கூட முற்றிலும் அகற்றப்படாத சூழல் அங்கு நிலவுகின்றது. கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை இதைச் சுற்றி தான் கதை நகர்கிறது. இதை சொல்லியிருக்கும் விதம் அனைவர் மனதையும் தாக்குகிறது.

போரில் காணாமல் போன, ஒரு தாயாக, போரின் வலியை சுமக்கும் பெண்ணாக மிகத் தேர்ந்த நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கின்றார் நவயுகா.

முன்னாள் போராளியாக, கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாக பாஸ்கியினுடைய நடிப்பு கவனம் ஈர்க்கிறது. படத்தின் வரும் மற்ற பாத்திரங்களும், கதாப்பாத்திரங்களாக அல்லாமல் நிஜ மனிதர்களை அப்படியே கண் முன் பிரதிபலிக்கிறார்கள்.

கண்ணிவெடி அகற்றும் பணி அந்த நிலம், மிக நுண்ணிய விவரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணி இடம், அதற்கான பணியாளர் ஒருங்கிணைப்பு, உடை எல்லாமே கச்சிதமான சித்தரிப்பினை வெளிப்படுத்துகின்றது.

எந்த சமசரமும் இல்லாமல் ஈழத்தின் இன்றைய நிலையை ஒரு டாக்குமெண்டரி வடிவில் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். சிவ சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சிந்தகா ஜெயக்கொடி இசையமைத்துள்ளார். சஜீத் ஜெயக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அனைவரமே படத்திற்கு தேவையானதை அழகாக செய்துள்ளார்கள். இப்படத்தை நேரடியாக யூடியூபில் வெளியிட்டு உள்ளனர். அனைவருமே இலவசமாக பார்க்க முடியும். மிக மிக அவசியமான ஒரு சினிமா. ஈழத்தை பற்றிய உண்மையான பதிவு இந்த ஆறாம் நிலம்.

Leave a Response