படமாக்கப்படும் பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போதைய சினிமா உலகில் அதிகம் கவனத்துக்குள்ளாகும் ஜானராக உள்ளது. ரசிகர்களிடமும் அப்படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அடல்ட் நடிகை ஷகிலா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் “ஷகிலா”. இந்தி மொழியில் எடுக்கப்பட்டு, ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் கலந்துகொண்ட, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் தம்பி ராமையா பேசுகையில்,

“நிறைய உழைப்பு தேவைப்படும். ஷகிலாவின் படம் எடுப்பது இன்னும் கடினமானது. படத்தில் ஒரு காட்சியில் “நான் திரைக்கு வெளியே யாரையும் ஏமாற்றுயதில்லை” என்று ஷகிலா சொல்வதாக ஒரு வசனம் வரும் அது நூறு சதம் உண்மை. நிஜத்தில் அவர் மிக இளகிய மனம் கொண்டவர். அது தான் அவர் வெற்றி பெற மிகப்பெரும் காரணம். இப்படம் பல மொழிகளில் வெளியாகிறது” என்று பேசினார்.

நடிகர், இயக்குநர் பிரவீன்காந்தி பேசும்போது,

“தன்னந்தனியே ஒற்றை ஆளாக மாஸ் காட்டியவர் ஷகிலா. மலையாள சினிமாவின் உச்ச நடிகர்கள் ஷகிலாவை திரைஉலைகில் இருந்து விரட்ட பலவாறு முயற்சித்தார்கள் என்பதை பலமுறை கேட்டிருக்கிறேன். அவரது கடின உழைப்பும், திறமையும் தான் அவருக்கு அசைக்க முடியாத வெற்றியை பெற்று தந்தது. அவர் கடந்து வந்த வாழ்க்கையில், அவர் அனுபவித்த வலி, விவரிக்க முடியாதது. அவரது கடின உழைப்புக்கு கிடைத்த அர்ப்பணிப்பு தான் இப்படம். திரைக்கு பின்னால் உள்ள நடிகைகளின் வலிகளை, இப்படம் பிரதிபலிக்கும். இப்படத்தின் இயக்குநர், நடிகை ஷகிலா அவர்களின் வாழ்க்கையை கிளாமராக இல்லாமல், அவர் அனுபவித்த வலியை அழகாக கூறியுள்ளார்” என்று பேசினார்.

நடிகை ஷகிலா கூறியதாவது,

“பயோபிக் எடுக்கமளவு எனக்கு தகுதியுள்ளதா, என எனக்கு தெரியாது. உயிரோடு இருப்பவருக்கு பயோபிக் எடுப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. எனது இந்த பயணத்தில் பெரும் ஆதரவளித்த நண்பர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் பெரும் நன்றி. நடிகை எஸ்தர் இப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். எனது வாழ்வில் நான் கடந்து வந்த சம்பவங்களை எனது புத்தகத்தில் உள்ளவற்றை படக்குழுவுடன் பகிர்ந்து கொண்டேன். அதில் நடிகையாக ஆசைப்படுபவர்களுக்கு ஒரு சிறிய செய்தி இருக்கிறது, அது சரியாக படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பங்கு கொண்டு உழைத்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றி” என்று மனம் நெகிழ பேசினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,

“தமிழ் சினிமா மீண்டும் புத்துணர்ச்சி பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு “மாஸ்டர்” படம் வெளியாக வேலைகள் நடந்து வருகின்றன. அதற்கு முன்னால் இந்த “ஷகிலா” திரைப்படம் கிறிஷ்துமஸ்ஸிற்கு ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும். இப்படம் வெற்றி பெற என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி நடித்துள்ளார்கள்.

ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். பிரகாஷ் பழனி இப்படத்தை வழங்குகிறார். ஷம்மியின் ‘Magic Cinema’, ‘Innovative Film Academy’ மற்றும் பழனியின் ‘International Media Works நிறுவனங்கள்’ இணைந்து இப்படத்தை வழங்குகிறது.

Leave a Response