சாகசம், ஹியூமர், திரில்லர் என அனைத்தும் தருகிறாள் சூர்ப்பனகை

மரத்தை சுற்றி டூயட் பாடும் ஹீரோயினாக அல்லாமல் மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் மீது நாட்டம் கொண்டு, வித்தியாசமான படங்களாக தேடி நடித்து, தனக்கென தனிச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளார் நடிகை ரெஜினா கஸண்ட்ரா. தெலுங்கில் அவர் எதிர்மறை பாத்திரத்தில் நடித்த “எவரு” பெரு வெற்றி பெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களும் பெரும் நம்பிக்கை அளிக்கும் தரமான படங்களாக இருக்கின்றன. தமிழிலும் அவர் அடுத்தடுத்து எதிர்பார்ப்பு மிக படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா கஸண்ட்ரா. “திருடன் போலிஸ்” படப்புகழ் இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி வெளியிட்ட “சூர்ப்பனகை” ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குநர் கார்த்திக் ராஜு இதுகுறித்து கூறியதாவது,

“மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மொத்த படக்குழுவிற்கும் பெரும் மகிழ்ச்சி. இது அவரது பெருந்தனமையே ஆகும்.

படத்தின் தலைப்பு “சூர்ப்பனகை” என்பதிலேயே இப்படம் கனமான கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டது என்பது விளங்கும். “சூர்ப்பனகை” எனும் பெயர் படத்தில் என்ன வகையான பாதிப்பை தரும், ரெஜினா கஸண்ட்ராவின் கதாப்பாத்திரம் என்ன மாதிரி இருக்கும் என பெரும் ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டியிருக்கும். அதுவும் ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள ரெஜினா கஸண்ட்ராவின் தோற்றம் மேலும் பல கேள்விகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவை அனைத்தும் இப்போதைக்கு மர்மமே. இது குறித்து தற்போது ஏதும் சொல்ல முடியாது. அப்போது தான் அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும். சூர்ப்பனகை ஒரு மர்ம வகை திரில்லர் திரைப்படம். சாகசம், ஹியுமர், திரில்லர் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும். ரசிகர்களை புது வகை திரில் அனுபவத்திற்கு அழைத்து செல்வதாக இப்படம் இருக்கும்” என்று தெரிவித்தார்.

‘Apple Tree Studios’ சார்பில் ராஜசேகர் வர்மா இப்படத்தை தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கி, குற்றாலம் முதலான நேரடி இடங்களில் தீவிரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Leave a Response