இருட்டில் நடக்கப்போவது என்ன?

Screen Scene Media Entertainment Pvt ltd தயாரிப்பில்- இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க, புதுமுகம்
சாக்‌ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா,யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் பேசிய எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கூறியதாவது,

“இருட்டு”. இந்த பெயரை கேட்டவுடன் எல்லோருக்கும் இப்படி ஒரு பெயரா என ஆச்சர்யம். உலகில் முதலிலிருந்து இருப்பது இருட்டு தான். வெளிச்சம் வந்து விட்டு போகிறது அவ்வளவு தான். எல்லோரும் தங்கள் படத்தை பொதுவாக வித்தியாசமாக இருக்கிறது என்றே சொல்வார்கள். ஆனால் நான் இப்படத்தில் அதை உண்மையாக சொல்கிறேன். ஊட்டியில் ஒரு இடத்தில் பகலிலேயே இருண்டு போய்விடுகிறது. அந்நேரத்தில் கொலைகள் நடக்கிறது. பகலில் எப்படி இருட்டுகிறது, ஏன் கொலைகள் நடக்கிறது என்பது தான் கதை. இதில் துப்பறியும் இன்ஸ்பெக்டராக வாழ்ந்திருக்கிறார் சுந்தர் சி.
இப்படத்தின் இயக்குநர் துரை, வெற்றிபெற வேண்டும் என்று முழு மூச்சாக உழைப்பவர். இதுவரை வந்த ஹாரர் படங்களில் உள்ள கிளிஷேக்கள் இந்தப்படத்தில் இருக்க கூடாது என உறுதியாக இருந்தார். படத்தில் வேலை செய்திருக்கும் ஒவ்வொருவரிடமும் முழுமையான வேலையை வாங்கியுள்ளார். சுந்தர் சி எனக்கு பிடித்த நடிகர். காவல் அதிகாரி பாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தின் 120 நிமிடத்தில் 100 நிமிடங்கள் உங்களை பதைபதைப்பில் வைத்திருக்கும் திரில்லர் படமாக இது இருக்கும். டிசம்பர் 6 ஆம் தேதி படம் வெளிவருகிறது. “இருட்டு” எல்லோருக்கும் வெளிச்சத்தை கொண்டு வரும். இதில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் கிரிஷ் பேசியது ,

“எனக்கு இது “அவள்” படத்திற்கு பிறகு இரண்டாவது பேய் படம். இயக்குநர் துரை சாரை கல்லூரி காலத்திலிருந்தே பிடிக்கும். அவருடன் வேலை செய்ய முடிந்தது மிகுந்த சந்தோஷம். பேய் படத்தில் என்ன புதிதாக செய்யலாம் என ஆராய்ச்சி செய்து வேலை செய்திருக்கிறோம். கிறிஷ்து, இந்து பேய்கள் பற்றி படங்கள் வந்திருக்கிறது. ஆனால் முஸ்லீம் பேய் பற்றி படம் வந்ததில்லை. இது புது அனுபவமாக இருக்கும். இப்போது படம் திரைக்கு வரவிருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும். பார்த்துவிட்டு சொல்லுங்க” என்றார்.

நாயகி விமலா ராமன் பேசும்போது.

“எனக்கு மிக வித்தியாசமான கதாபாத்திரம் தந்த இயக்குனருக்கு நன்றி. சுந்தர் சி சார் உடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இந்தப்படமே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் பிடிக்கும். நம்புகிறேன் நன்றி” என்று பேசினார்.

VTV கணேஷ் பேசியதாவது,

“இருட்டு” படத்தில் நடித்ததே புதிய அனுபவம் தான். சுந்தர் சி யிடம் ஒரு படம் செய்யலாம் என போனேன். அவர் இப்போது படம் இயக்கவில்லை ஒரு பெரிய படம் நடித்து தருகிறேன், என்றார். VZ துரையை அறிமுகப்படுத்தினேன். சூப்பர் என்றார். பெரிய படமாக செய்யலாம் என்றேன். வழக்கமான படமாக இருக்ககூடாது என்று சொன்னேன். VZ துரை புதிதாக இஸ்லாம் சம்பந்தமாக ஒரு விசயத்தை பிடித்தார். அது பக்காவாக இருந்தது. ஊட்டியில் ஷுட்டிங் நடத்தினோம். சுந்தர் சி வீட்டுக்கே போகவில்லை. அவ்வளவு டெடிக்கேட்டாக உழைத்தார். VZ துரை, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். படம் பாருங்கள் பிடிக்கும்” என்றார்.

நாயகி சாக்‌ஷி சௌத்ரி பேசியதாவது,

“இந்தப்படம் நான் நீண்ட நாளாக எதிர்பார்த்திருக்கும் கனவு. இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. சுந்தர் சி சாருடன் இணைந்து நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இப்படத்தின் கதை புதுமையாக இருந்தது. படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்று தெரிவித்தார்.

இயக்குநர் VZ துரை கூறியதாவது,

“இப்படத்தில் மூலமாக எனக்கு கிடைத்த அருமையான விசயம், சுந்தர் சி சாரின் நட்பு. VTV கணேஷ் சார் தான் இப்படம் உருவாக காரணம். அவர் தான் இப்படத்தை உருவாக்கினார். Screen Scene இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்கள். சுந்தர் சார் பேய் படம் செய்யலாம் என சொன்னபோது நான் வேண்டாம் சார் எனக்கு பயம் சார் நான் பண்ண மாட்டேன் என்றேன். ‘அப்ப நீங்க தான் சரியான ஆள். உலகின் மிகப்பெரிய ஹாரர் இயக்குநர் ஜேம்ஸ் வான் அவரும் பயப்படுபவர் தான்’ என்று சொல்லி என்னை சமதானப்படுத்தினார். சுந்தர் சாரே ஒரு ஹாரர் இயக்குநர். அவர் படங்கள் கமர்ஷியல் கலந்து இருக்கும். அவர் ஐடியாக்கள் எல்லாம் பிரமாண்டமாக இருக்கும். என்னுடையது வேறு மாதிரி இருக்கும். அவர் முழு ஈடுபாட்டுடன் இந்தப்படத்தில் உழைத்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத புது விசயத்தை இதில் அறிமுகப்படுத்தியுள்ளோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

சுந்தர் சி பேசியது,
“ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக காரணம். அவர் ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் என சொன்னேன். நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விசயங்கள் இருக்கும். முழுக்க பயப்படுற மாதிரி ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது இயக்குநராக யாரை போடலாம் எனப் பேசினோம். VZ துரை சாரை சொன்னபோது முதலில் பயந்தேன் அவர் படங்கள் பார்த்து. அவர் வயலண்டாகா இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு அப்பாவி. பேய்ப்படம் பண்ண மாட்டேன் என்றார். அவரை தயார் படுத்தி நிறைய பேய்படங்கள் பார்க்க வைத்தோம். பின் அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விசயம். இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை. இயக்குநராக VZ துரை முதல் நாளிலேயே என்னை 10 டேக் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக்கொண்டேன். அவருக்கு திருப்தி வரும் வரை அவர் மீண்டும் மீண்டும் எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக்கொண்டேன் என்று சொல்வார் ஆனால் நடிகராக அவரிடம் நான் கற்றுக் கொண்டேன். இந்தப்படம் புதிதான பேய் படமாக இருக்கும். படம் டிசம்பர் 6 தியேட்டர் வருகிறது பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.

Leave a Response