இப்போது பெரும்பாலான பெண்கள் மது அருந்துகிறார்கள்! சொல்கிறார் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி!!

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில்,கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே”. இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் நடிகர் சந்தானபாரதியின் மகன். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையையும், அதனை தொடர்ந்த நடக்கும் அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் தளத்தில் சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தின் பத்திரைகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது, “இந்தப்படம் சுரேஷ் சாரால் தான் ஆரம்பித்தது. அவர் தான் தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தினார். கதை கேட்டு பிடித்து இந்தப்படத்தை கோகுலம் மூவிஸ் தயாரித்துள்ளார்கள். ராசியை நம்பும் ஒரு ஹீரோ அதற்கேற்ற ஹீரோயினை கல்யாணம் செய்யத் தேடுவதுதான் கதை. காமெடியாக, குடும்பத்தோடு எல்லோரும் பார்க்கக் கூடிய படமாக இருக்கும். இது நடிகர் தனுஷை மையமாக வைத்து எழுதவில்லை. முதலிலேயே ஹரீஷைத்தான் அணுகினோம். எதிர்வீட்டுப் பையன் மாதிரி ஒரு ஆள் தான் ஹரீஷ். அவர் அந்தக்கால கார்த்திக்கை ஞாபகப்படுத்துவார்.
படத்தின் டிரெய்லரை பார்த்து அடல்ட் காமெடி என்கிறார்கள். ஆனால் இது கண்டிப்பாக அடல்ட் காமெடி படம் கிடையாது. நாயகியின் பெயர் கே ஆர் விஜயா. ஒரு மாற்றத்திற்க்காக தான் அந்தப்பெயரை வைத்தோம். படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். டிகாங்கனா, ரெபா மோனிகா இருவரும் நாயகி ரோல் சூப்பராக பண்ணியிருக்கிறார்கள். ஜிப்ரான் இசையில் 5 பாடலகள் படத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றும் வேறு மாதிரி இருக்கும். படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. கூடிய விரைவில் திரையில் சந்திக்கிறோம்” என்றார்.

பத்திரிகையாளரின் ஒரு கேள்விக்கு,”டீசரில் பெண்கள் மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டதே, இது பெண்களை இழிவு படுத்தும் செயல் இல்லையா?” என்று கேட்டதற்கு “இப்போது பெரும்பாலான பெண்கள் மது அருந்துகிறார்கள்…” என்று மழுப்பலாக ஒரு பதிலை சொன்னார். அவர் சொல்லுவதை போல பார்த்தால், இளைஞர்கள் இந்த மதுவுக்கு அடிமை ஆவதற்கு காரணம் தற்போது திறக்கப்பட்டுள்ள அதிக அளவிலான மதுக்கடைகள் மட்டுமே! முன்பெல்லாம் மதுக்கடைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனால், தற்போது தெருவிற்கு ஒரு டாஸ்மாக் கடை வந்துவிட்டது. இந்த சமுதாய சீர்கேட்டை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் தான் சரியாகும்.

Leave a Response