பிளாஸ்டிக்குகளுக்கு தடை : தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு..!

பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேர வையில் கடந்த ஜூன் 5-ம் தேதி அன்று அறிவித்தார். அதன்படி 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்த அரசாணையில் பால் மற்றும் பால் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், சிறப்பு பொரு ளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பிளாஸ்டிக் மேலாண்மை சட்ட விதிபடி, பிளாஸ்டிக் பயன்பாட்டை மத்திய அரசுதான் தடை செய்யவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ முடியும் என்றும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எந்த தடை விதிக்காமல் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Response