டாஸ்மாக் கடை கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள்…! ஏன் தெரியுமா?

டாஸ்மாக் கடை அமைப்பதில் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், திண்டிவனம் அருகே நொளம்பூர் கிராம மக்கள் வித்தியாசமான கோரிக்கை மனு ஒன்றை ஆட்சியரிடம் அளித்துள்ளனர். தங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. கல்வி நிலையங்கள், கோயில், குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பல இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மத்தியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதற்கெல்லாம் நேர்மாறாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து, தங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று கோரி, ஆட்சியர் சுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இது குறித்து நொளம்பூர் மக்கள் கூறும்போது, நாங்கள் நொளம்பூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் காலையில் வேலைக்குச் சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீடு திரும்புகின்றனர்.

வேலை முடிந்து வந்ததும் உடல் அசதியைப் போக்குவதற்கு சிலர் டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்தி வருகின்றனர். எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை இல்லாததால் திண்டிவனம், ஆவணிப்பூர், சாரம், ஈச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மது குடிக்கின்றனர்.

வெகு தொலைவில் சென்று மது குடித்துவிட்டு வெகு நேரம் கழித்து பைக்கில் வீட்டுக்கு புறப்படுகிறார்கள். அவ்வாறு வரும்போது அடிக்கடி சாலை விபத்தில் சிக்கி சிலர் இறந்து விடுகின்றனர். நொளம்பூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை இருந்தால், எந்த சிரமமும் இன்றி மது வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு தூங்கி விடுவார்கள். இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று நொளம்பூர் கிராம மக்கள் தெரிவித்தனர்.

Leave a Response