டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை ஊதியம் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சில்லறை விற்பனை பணியாளர்களான மேற்பார்வையாளர்களுக்கு 750 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 600 ரூபாய் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு 500 ரூபாய் என ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி, இந்த ஊதிய உயர்வு நடப்பு ஆண்டு செப்டம்பர் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபானத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்கள் மறுவாழ்வு நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேபோல், குடிப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்திற்கு 3 கோடி ரூபாயும், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் 24 சோதனைச் சாவடியில் வாகனங்களின் மேற்புறத்தில் பொருத்துவதற்கு புகைப்படக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கும், நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கவும் 43 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Leave a Response