தம்பதிகள் ; நகைப் பறிப்பு : தடுக்க வந்தவரை தாக்கி தப்பி ஓடிய மர்ம நபர்கள்,

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (64). கூலித் தொழிலாளியான இவரது மனைவி விஜயா (58).

இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு திருவெள்ளைவாயல் பஜாரில் இருந்து வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

திருவெள்ளைவாயல் – இலவம்பேடு சாலையில் வரும்போது மர்மநபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவர்கள் இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி 10 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பியோடினர்.

அந்த வழியாக வந்த தேவதானம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மர்மநபர்களை பிடிக்க முயன்றபோது அவரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் காவலாளர்கள், தாக்குதலில் காயமடைந்த மூவரையும் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஜெயராமனை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து காட்டூர் காவலாளர்கள் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவான மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Response