தமிழகத்துக்கு தீங்கு நினைத்தால் எப்போதும் பாஜக வெற்றிபெற முடியாது-இயக்குநர் கௌதமன் திட்டவட்டம்..!

கர்நாடகம் மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்துக்கு தீங்கு நினைத்தால் எந்தக் காலத்திலும் இங்கு பாஜக வெற்றிபெற முடியாது என்று திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்தார்..

தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை (நீட்) நடத்த எதிர்ப்புத் தெரிவித்து, கடலூரிலிருந்து வியாழக்கிழமை அதாவது நாளை இருசக்கர வாகனப் பேரணி நடத்துவதற்கு திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் மாவட்ட காவல் துறையிடம் அனுமதி கோரியிருந்தார்.

இது தொடர்பாக நேற்று மாலை கடலூரில் அவர் செய்தியாளர்களிடம், “நீட் தேர்வுக்கு எதிரானப் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

எனினும், திட்டமிட்டபடி கடலூரில் 3-ஆம் தேதி “கடலூர் புரட்சி” என்ற பெயரில் அறவழிப் போராட்டம் நடத்தப்பட்டு, வாகனப் பேரணி நடைபெறும்.

இதில், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர் மற்றும் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மே 3-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். கர்நாடகம் மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்துக்கு தீங்கு நினைத்தால் எந்தக் காலத்திலும் இங்கு “பாஜக வெற்றிபெற முடியாது” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்..

Leave a Response