கேள்வித்தாள் வெளியானதாக புகார்: 10,12-ம் வகுப்பில் 2 தேர்வுகளை மீண்டும் நடத்துகிறது சிபிஎஸ்இ..

கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து, 10ம்வகுப்பில் கணிதத் தேர்வையும், 12-ம் வகுப்பில் பொருளாதாரப் பாடத் தேர்வையும் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

10-ம்வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. ஏறக்குறைய 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

இதில் 10-ம் வகுப்பு கணிதம்(கோட்-041), பாடத்துக்கான கேள்வித்தாளும், 12-ம் வகுப்பான பொருளியல்(கோட்0390) கேள்வித்தாளும் தேர்வுக்கு முன்னதாக நேற்று இரவு சமூக ஊடகங்களில் வெளியானதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், இதுதொடர்பான செய்திகள் நாளேடுகளிலும், செய்தி சேனல்களிலும் வெளியாகின. இதையடுத்து, 10-ம்வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

10ம்வகுப்பு, 12-ம்வகுப்பு பாடங்களின் தேர்வுத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்தது. பொதுத்தேர்வின் பொதுநலன், நேர்மை, நியாயம், மாணவர்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளோம். 10ம்வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளியல் பாடம் ஆகியவற்றுக்கான தேர்வுத் தேதிகள் அடுத்த ஒருவாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவில் 10ம்வகுப்பு கணிதம், 12-ம்வகுப்பு பொருளியல் ஆகிய பாடங்களுக்கான மறுதேர்வு டெல்லி மாநிலத்துக்கு மட்டுமா அல்லது, நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடங்களுக்கா என்பதை தெளிவாகக் குறிப்பிடவில்லை,

மேலும், சிபிஎஸ்இ தேர்வு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து சில மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர்.

Leave a Response