‘அட்டகத்தி’ தினேஷின் அடுத்த படம் “வாராயோ வெண்ணிலாவே”!!

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் ‘நினைத்தது யாரோ’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவன தயாரிப்பாளர்கள் பி. ரமேஷ், இமானுவேல் இருவரும் அதிக பொருட்செலவில் “வாராயோ வெண்ணிலாவே” என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகனாக ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கிறார். ‘அட்டகத்தி’ வெற்றிப் படத்திற்குப் பின் தினேஷ் நடிக்கும் இரண்டாவது படம் இது. கதாநாயகிகளாக ஹரிப்ரியா, காவ்யா ஷெட்டி இருவரும் நடிக்கிறார்கள். தம்பி ராமய்யா, முருகதாஸ் மற்றும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

எழுதி இயக்குபவர் ஆர். சசிதரன், இவர் ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கி வெற்றி பெற்ற ‘சென்னை-28’ படத்தின் திரைக்கதை, எழுதி வசன உதவியாளராகப் பணியாற்றியவர். ஒளிப்பதிவு – ராணா. இசை – கார்த்திக் ராஜா.

படத்தைப் பற்றி இயக்குனர் ஆர்.சசிதரன் கூறும்போது, “பணக்கார இளைஞராக வரும் தினேஷ் சென்னையிலிருந்து கேரளாவுக்கு வேலை செய்ய செல்கிறார். சென்ற இடத்தில் அழகான பெண்ணை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். காதலின் விளைவு, எதிர்பாராத திடீர் திருப்பங்களுடன் கதை முடிகிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தைப் பற்றி நடிகர் தினேஷ் கூறும்போது, “நல்ல கதை, திரைக்கதை யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் தரைக்கதையில் உண்டு. “அட்டகத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு சிறப்பான கதைக்களம் என்பதால் இதுவும் எனக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையுடன் நடிக்க ஒத்துக் கொண்டேன்” என்றார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தினேஷின் இரண்டு படங்களின் இயக்குனர்களும் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களே…